திண்டுக்கல்: கரூரைச் சேர்ந்தவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 10 சதவீத கமிஷன் தருவதாக வரவழைத்து ரூ.90 லட்சத்துடன் தப்பிச்சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்தவர் சக்திவேல்(57). இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள கொண்டமநாயக்கனூர் பகுதியில் வசித்து வருகிறார். தன்னிடம் ரூ.2,000 நோட்டுகள் இருப்பதாகவும், அதனை மாற்றித் தருவதற்கு 10 சதவீத தரகுத் தொகை தருவதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார்.
இதனை அறிந்து, கரூரைச் சேர்ந்த குணசேகரன், ராஜசேகர், திருப்பூரைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோர் ரூ.90 லட்சத்துடன் (ரூ.500 நோட்டுகளாக) கொண்டமநாயக்கனூர் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்தனர்.
இந்த நிலையில் சக்திவேல், அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து ஷாஜஹான் தரப்பினர் கொண்டு வந்த ரூ.90 லட்சத்தையும், காரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாஜஹான் தரப்பினர், எரியோடு காவல்நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி ஆகியோர் ஷாஜஹான் தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பிச் சென்ற சக்திவேல் உள்ளிட்ட 9 பேரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.