கோவை: கோவையில், வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கியுள்ள தனியார் அறக்கட்டளைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை, பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்.
ஐந்து விதமான வெரைட்டி சாதங்களை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் வழங்கி வரும் இந்த உணவைப் பெற கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து அறக்கட்டளையின் மேலாளர் ஜெபசீலன் கூறுகையில் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, பிற்பகல் 12.30 மணிக்கு உணவுப் பொட்டலம் வினியோகம் செய்வதாகவும் ஆரம்ப நாட்களில் சுமார் இருநூறு பேர் வரை வந்த நிலையில் தற்போது தினமும் ஐநூறு பேர் வரை உணவு பொட்டலங்களை பெற்றுச் செல்வதாகத் தெரிவித்தார்.
தினமும் ஒரு வகை உணவு என்ற வகையில், வெரைட்டி சாதம் பொட்டலமாக வழங்கப்படுகிறது, ஏற்கனவே 10 ஆண்டுகளாக எங்களது அறக்கட்டளை பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, கரோனா காலத்தில் ஏற்கனவே பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வந்துள்ளோம். மேலும் ஒரு சேவையாக, ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் நோக்கத்தில், வாரத்தில், 5 நாட்கள் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
உணவு வாங்க வருபவர்களிடம் வாங்கும் ஒரு ரூபாயை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் இந்த சேவையை அப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் வரவேற்று பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.