சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணித்திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவுற்று இன்று புதன்கிழமை காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆண்டு இருமுறை ஆனித்திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசன உத்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 25-ம் தேதி தேர் திருவிழாவும், 26-ம் தேதி திங்கள்கிழமை மகாபிஷேகம் மற்றும் ஆனித்திருமஞ்சன தரிசன உத்வம் நடைபெற்றது.
கோயிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். கோயில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்திருந்தனர். அதனை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்பு வந்து அகற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.