சேலம்: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடந்தது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்.
விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.அருள் (சேலம் மேற்கு) மற்றும் எஸ்.சதாசிவம் (மேட்டூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இருவரும் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால், பயணியர் மாளிகையில் மனு அளிக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும், இருக்கை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பிய எம்.எல்.ஏ.க்கள் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விழாவிலிருந்து வெளியேறிய இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஆளுநரின் தனி பாதுகாவலர் சமாதானம் செய்ய முயற்சித்தும் ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறினர்.