நாமக்கல்: தமிழகத்தில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படவில்லை; ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சர் அ. நாராயணசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில், மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் தொடர்பாக கட்சி தொடர்பான கூட்டங்களிலும், திட்டங்கள் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
இதையும் படிக்க | பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு ஒத்து வராது: கே.எஸ். அழகிரி பேட்டி
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அனைவருக்குமான குடிநீர் இணைப்பு திட்டம், எரிவாயு இணைப்பு திட்டம் ஆகியவை குறித்து மதுரை, திண்டுக்கலில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தேன். இதில் பல இடங்களில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு, மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் சம்பந்தப்பட்ட திட்டங்களின் துறை சார்ந்த அமைச்சகத்திலும் புகார் தெரிவிக்கப்படும் என்று இணை அமைச்சர் அ. நாராயணசாமி தெரிவித்தார்.