வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருந்த பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு நகரப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்கக் கட்டணமில்லை என அறிவித்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணித்து வருகின்றனர். கட்டணமின்றி பெண்கள் இலவசமாகப் பயணிப்பதால், நகரப் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஏளனமாகப் பேசுவதாகவும், பேருந்து நிறுத்தங்களில் பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் சென்று விடுவதாகவும், பரவலாக பெண்களிடையே குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்த புகார் உண்மையெனத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு நகரப் பேருந்து! வைரலாகும் விடியோ!!
இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பேருந்துக்கு காத்திருக்கும் பெண்களை, அரசு நகரப் பேருந்துகளில் ஏற்றிச் செல்வதில்லை என புகார்கள் எழுந்தன.
மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் கடந்த ஜூன் 26, திங்கள்கிழமை அரசு நகரப் பேருந்துக்காக காத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், கைகளைத் தாழ்த்தி செய்கை செய்து காண்பித்தும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனை வீடியோ பதிவு செய்த சிலர், சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து தினமணி டாட் காம் விரிவான செய்தி வெளியிட்டது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவியதால், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருந்த பெண்களை ஏற்றிச் செல்லாத அரசு நகரப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துகள் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றாமல் சென்றது உறுதியானது. சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் வாழப்பாடி கிளை பணிமனையில் இருந்து இயக்கப்படும் இந்த நகரப் பேருந்தில் அன்றைய தினம் பணியில் இருந்த ஓட்டுநர் கண்ணன், நடத்துநர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, அனைத்து அரசு நகரப் பேருந்துகளிலும், அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும், பெண் பயணிகளை கட்டணமின்றி ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டுமென, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.