இன்னும் 10 நாள்களில் சென்னை அண்ணா நகர் கோபுரம், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா நகரில் உள்ளது அண்ணா நகர் கோபுரம் பூங்கா. இங்குள்ள கோபுரம் 138 அடி கொண்டது. 1960ல் கட்டப்பட்டது. கடந்த 2011ல் ஒரு காதல் ஜோடி கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதையடுத்து பாதுகாப்பு பிரச்னை காரணமாக கோபுரத்தின் மேல் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து கோபுரத்தில் பாதுகாப்புப் பணிகள், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் கோபுரம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை.
பூங்கா திறக்கப்படுவது குறித்து இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை, எனினும் இன்னும் 10 நாள்களில் திறக்கப்படலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது கலைப்பணிகள் முடிய இன்னும் 3-4 நாள்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்.
கோபுரத்தில் கலாசார ஓவியங்கள், அழகியல் சீரமைப்புப் பணிகளுடன் பாதுகாப்புக்காக க்ரில் கம்பிகளை நிறுவியுள்ளது. கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்க..!