சென்னை: தவறை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று அறப்போர் இயக்கம் வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து தனடு டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.
இதையும் படிக்க.. சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணி: கைவிடப்படும் 6 ரயில் நிலையங்கள்
இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான - உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது
விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அறப்போர் இயக்கம் தரப்பில், 1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் #பாக்ஸ் டென்டர்களை ரத்து செய்ய அறப்போர் கோரிக்கை: டாஸ்மாக்கில் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள் மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளது.
ஈ டெண்டர் போடாமல் தொடர்ந்து பாக்ஸ் டெண்டர் போடும் டாஸ்மாக்கின் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈ டெண்டர் போடாமல் அவர் துறையில் வேண்டுமென்றே பாக்ஸ் டெண்டர் போடுவதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.
பாக்ஸ் டெண்டர் ஊழலுக்கு வழிவகை செய்யக்கூடியது என்பது நன்றாகத் தெரிந்தும் அவர் துறை ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறது என்பதை கூற வேண்டும். தமிழ்நாடு அரசு உடனே இந்த டெண்டர்களை ரத்து செய்து முழுமையான ஈ டெண்டர்களை போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.