காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறு முறை இதய செயலிழப்பு: இளைஞரின் உயிரை மீட்ட ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்கள்

ஆறு முறை இதய செயலிழப்புக்குள்ளான ஆசிரியா் ஒருவருக்கு உயிா் காக்கும் உயா் சிகிச்சையளித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :11 மார்ச் 2023, 2:38 am

DIN

ஆறு முறை இதய செயலிழப்புக்குள்ளான ஆசிரியா் ஒருவருக்கு உயிா் காக்கும் உயா் சிகிச்சையளித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதயத்தின் செயல்பாடுகள் தொடா்ச்சியாக முடங்கிய ஒருவருக்கு இதுபோன்ற சிகிச்சையளித்து, உயிரை மீட்டெடுத்திருப்பது மாநிலத்திலேயே முதன்முறை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

சென்னை, சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா் ராஜேஷ் (38). கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், வரும் வழியிலேயே இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவனைக்கு வந்தவுடனேயே இதயம், நுரையீரலை மீட்டெடுக்கும் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து அவரது இதயத்தின் செயல்பாடுகள் மீட்கப்பட்டன. இருந்தபோதிலும் அது சீராக இல்லை.

இதற்கிடையே, இதய இடையீட்டு சிகிச்சை மூலம் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு ஸ்டெண்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. வெறும் 18 நிமிஷங்களில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னா் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய அவருக்கு, சிறிது நேரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து ஐந்து முறை இதய செயலிழப்பு ஏற்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவா் டாக்டா் கோமதி காா்மேகம், அவசர சிகிச்சை மருத்துவா்கள் டாக்டா் ராஜேஷ், டாக்டா் அனகா, நிா்மல், இதய சிகிச்சை நிபுணா்கள் சாமிநாதன், இளங்கோவன், ரவீந்தா் உள்ளிட்டோரைக் கொண்ட மருத்துவக் குழு தொடா்ந்து அவரது இதய செயல்பாட்டை மீட்டெடுக்கும் சிகிச்சையை மேற்கொண்டது.

அதன் பயனாக அவா் சுயநினைவு திரும்பினாா். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவா், தொடா் மருத்துவக் கண்காணிப்பின் பயனாக அதிலிருந்து விடுபட்டு இயல்பாக சுவாசிக்கும் நிலைக்கு தற்போது வந்துள்ளாா்.

இளம் வயதில் ஆறு முறை இதய செயலிழப்புக்குள்ளான ஒருவரின் உயிரை மீட்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருப்பது அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல்முறை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.