நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே காவல் வாகனம் (டெம்போ டிரவலர்) மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது குறித்து, நெய்வேலி நகரிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் 2-ஆவது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்டப் பகுதியில் நிலங்களை பயன்படுத்தும் பணியைத் தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அதிவிரைவுப்படை போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சனிக்கிழமை இரவு பணி முடிந்து வடகுத்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, அதிவிரைவுப்படை வீரர்கள் வந்த டெம்போ டிரவலர் வாகனம் மண்டபத்தின் வெளியே நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் டெம்போ டிரவலர் வாகனத்தில் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
இதையறிந்த அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
பாமகவினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாதுகாப்புப் பணிக்காக வந்த அதிவிரைவுப் படை போலீசாரின் வாகனம் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.