காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை அரிசி மற்றும் நல்லெண்ணெய் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோயில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.
இதையும் படிக்க | புழு மழை’யால் தத்தளித்த சீனா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடியோ!
இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நெற்கதிா் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாள்களுக்குள் சிறப்பு பூஜைப் பொருள் மாறியுள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்ற பக்தரின் கனவில் வந்ததாக, திங்கள்கிழமை 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த உலக உருண்டை நீக்கப்பட்டு, தற்போது அரிசி மற்றும் நல்லெண்ணெய் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.