தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ள நிலையில், நாகை நகர் பகுதியில் உள்ள நடராஜன் தமயேந்தி அரசு உதவிப்பெறும் பள்ளியில், எழுதும் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து, வாழ்த்துகளை தெரிவித்து பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுப்பிவைத்தனர்.
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 208 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வையும், நாளை (மார்ச் 14) நடைபெறும் பிளஸ் 1 பொதுத் தேர்வை 7 ஆயிரத்து 532 மாணவர்களும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆர்வமுடன் படிக்கும் மாணவிகள்.
34 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்களை கண்காணிக்க 87 நிரந்தரப் பறக்கும் படைகள், 10 பேர் வாகனங்களில் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று (மார்ச் 13 ) முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகளும், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் பரபரப்பான சூழல் தொற்றிக் கொண்டுள்ளன.
இந்நிலையில், நாகை நகர் பகுதியில் உள்ள நடராஜன் தமயேந்தி அரசு உதவிப்பெறும் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து, வாழ்த்துகளை தெரிவித்து அப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுப்பிவைத்தனர்.
இது மாணவர்களிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.