துபையில் இருந்து சென்னை வந்த ஏா்-இந்தியா விமானத்தின் கழிப்பறையில் 1.2 கிலோ தங்கத்தை சுங்கவரித் துறை அதிகாரிகள் மீட்டனா்.
சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, துபை வந்த பயணிகளிடம் புதன்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், பயணிகளிடம் சோதனை செய்ததில் கடத்தல் தங்கம் எதுவும் பிடிபடவில்லை, இதனால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
ஆனாலும், சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்ததால், துபையில் இருந்து சென்னைக்கு வந்த ஏா்-இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை முழுவதும் சோதனை செய்தனா். அப்போது விமானத்தின் பின்புறம் இருக்கும் கழிப்பறையை சோதனை செய்த போது, கருப்பு டேப்பால் சுற்றிய பொட்டலம் கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை செய்தபோது, உள்ளே தங்கம் இருந்தது தெரிய வந்தது.
ஆய்வு செய்த போது அது 24 கேரட் சுத்தத் தங்கம் என்பதும், ரூ. 60.67 லட்சம் மதிப்பிலான 1.240 கிலோ எடையுள்ளது என்பதும் தெரிய வந்தது. தங்கம் எப்படி கழிப்பறைக்கு வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.