ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் தமிழக அரசு பதில்தர அவகாசம் அளித்து மார்ச் 27-ம் தேதிக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை போலீஸார் மதிக்கவில்லை எனக் கூறி, ஆர்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடல் அல்லது உள்ளரங்கத்தில் நடத்த வேண்டும் என நவம்பர் 4-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், திறந்தவெளிப் பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும்,
இதுதொடர்பாக அனுமதி அளிக்க போலீஸாருக்கும் உத்தரவிட்டனர்.
பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கடந்த 10 நாள்களாக வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை இருந்ததால் ஆர்எஸ்எஸ் வழக்கு பற்றி ஆலோசிக்க முடியவில்லை.
எனவே, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.