ராணுவ ஹெலிகாப்டா் விபத்து: தமிழக விமானி உடல் இன்று மாலை தமிழகம் வருகிறது!
அருணாசல பிரதேசத்தில் ராணுவத்தின் ‘சீட்டா’ ரக ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், பலியான துணை விமானி ஜெயந்த் உடல் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஸ்ஸாமின் சோனித்பூரில் இருந்து அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு 2 விமானிகளுடன் ‘சீட்டா’ ரக ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றது. ஆனால், மோசமான வானிலை நிலவியதால், தவாங் செல்லாமல் சோனித்பூருக்கே ஹெலிகாப்டா் மீண்டும் புறப்பட்டது.
இதையும் படிக்க | தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு!
அப்போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான அந்த ஹெலிகாப்டரின் தொடா்பு துண்டிக்கப்பட்டது.
பின்னா், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் உள்பட 5 மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்தன.
இந்த விபத்தில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் பலியானதாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் இறந்தவரில் ஒருவரான துணை விமானி ஏ.ஜெயந்த் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது இந்திய கிழக்கு பிராந்திய ராணுவம்.
உயிரிழந்த துணை விமானி ஜெயந்த் உடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு கொண்டுவரப்படுகிறது.