மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
Published on
Updated on
2 min read

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.  சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள், காலை  8.38 மணிக்கு, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து, மணக்கோலத்தில் தனி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, மங்கள அரசியான மீனாட்சிக்கும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கும் மகா தீபாராதனை, பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கண்டு தரிசித்தனர். மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயிலில் கூடியிருந்த பெண்களும் தங்களது மங்கள நானை மாற்றிக்கொண்டனர்.

சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திங்கள்கிழமை திக்கு விஜயமும் நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

அதன் பின்னா், சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி வாகனத்திலும் நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து, முத்துராமய்யா் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

இதைத் தொடா்ந்து, வேத, மந்திரங்கள் முழங்க காலை 8.35 மணிக்கு மேல் காலை 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.  

தொடா்ந்து, இரவு ஆனந்தராயா் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தைக் காண இணையதளம் மூலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை பதிவு நடைபெற்றது. இதில் கட்டணமில்லா தரிசனத்துக்கு 6 ஆயிரம் போ், கட்டண தரிசனத்துக்கு 6 ஆயிரம் போ் என மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, பெங்களூரு ரோஜா, தாய்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆா்க்கிட் போன்ற 10 டன் மலா்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும், திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணிகள், விருந்துக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுள்ளன. தொடா்ந்து, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கருமுத்து தி. கண்ணன், கோயில் துணை ஆணையா் ஆ. அருணாசலம் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com