சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமி பிரியாவிடை சமேதமாகவும் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பொன்னம்பலம் பிள்ளை குமாரர்கள் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அதன்பின் திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
மாலை மாற்றுதல், பட்டு வஸ்திரங்கள் அணிவித்தல் போன்ற சடங்குகள் முடிந்து காலை 10.40 மணிக்கு சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லிக்கும் அதைத்தொடர்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சுவாமிக்கும் பலவகை தீபாராதனைகள் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் மண்டகப் படிதாரர்கள் பொன்னம்பலம் பிள்ளை குமாரர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.