சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடப்பு ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற மே 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கு இன்று டிக்கெட் விற்பனை நடைபெற்றது. ரூ. 1,500 முதல் ரூ. 3,000 வரையில் டிக்கெட்டுகள் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி டிக்கெட் வாங்க முடியவில்லை, எனவே தங்களுக்கு தனி வரிசை வேண்டும் என்று கோரினர். இதையடுத்து அவர்களுக்கு டிக்கெட் பெற்றுத்தருவதாக போலீசார் கூறிய நிலையில் அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.