கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் கடந்த ஒரு மாதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர், காவேரிப்பட்டிணம், பையூர் ஆகிய பகுதிகளில் முகமிட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தாய் இந்த இரு யானைகளையும், வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானைகள் கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள ஏரியில், நேற்று, ஆனந்த குளியல் இட்டு விளையாடி மகிழ்ந்தன.
நேற்று மாலை, ஏரியிலிருந்து வெளியேறிய யானைகள், கிருஷ்ணகிரி அணை நோக்கி இடம்பெயர்ந்தன. நள்ளிரவில் இந்த யானைகள், திசை மாறி, கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்து, புறநகர் பேருந்து நிலையம் வழியாக சாமந்த மலை கிராமத்துக்குள் புகுந்தது.
நகருக்குள் புகுந்த யானைகள், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை சேதப்படுத்தின.
இந்த நிலையில் அந்த யானைகள் சாமந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (58) என்பவரை தந்தத்தால் குத்தியது. பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் உயிரிழந்தார். சாமந்த மலை கிராமத்தின் அருகே முகாமிட்டுள்ள இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த யானைகளை மேலுமலை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.