கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சாதிக்அலி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை காலையில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் 11 - வது வார்டு கம்பமெட்டு காலனியில் வசிப்பவர் முகமது ஷரீப் மகன் எம்.சாதிக்அலி(39). இவர் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தேனி மாவட்டச் செயலாளராக உள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை காவல் துறை ஆய்வாளர் பிரியா தலைமையில் வந்தனர்.
அவரிடமும், குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டில் சோதனை தடத்தி கைப்பேசிகள், ஆவணங்கள் போன்றவைகளை கைப்பற்றி அவரது குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்று கைது செய்தனர்.
சாதிக் அலியை கைது செய்து வரும்போது அவரை கைது செய்யக் கூடாது என்று எஸ்டிபிஐ கட்சினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) எம்.பிச்சைபாண்டியன் தலைமையில் காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர்.