காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பரவலாகவும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை (மே 10) காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெறவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை முதல் மே 13-ஆம் தேதி வரை இ-மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காற்றழுத்தாழ்வு மண்டலம் தீவிரம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் என 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீன்வளத் துறை மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையையடுத்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடற்கரை பகுதிகளில் போலீஸாரின் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.