தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். இவர் திமுக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, 'டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டிஆர்பி ராஜா மிச்சிறப்பாக பணியாற்றி முதல்வரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள். அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும்' என்று கூறினார்.
பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, 'அவர் என்னுடைய நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். டிஆர்பி ராஜா அமைச்சராக அவரும் முக்கியமான காரணம்' என்று கூறினார்.