சென்னையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின.
தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
போக்குவரத்து துறை, தனியார்மயமாதலைக் கண்டித்து போக்குவரத்துத் துறை ஊழியர்கள் இன்று (மே 29) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்த அனைத்து மாநகரப் பேருந்துகளையும் இயக்காமல் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்ற இந்த போராட்டத்தால், பொதுமக்களில் பலர் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க ஊழியர்களுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதன் பின்னர், சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலிருந்தும் பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.