விளைநிலங்களை அழித்துவிட்டுதான் அறிவு நகரம் அமைக்க வேண்டுமா? - அன்புமணி கேள்வி

முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழ்நாடு அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது.
விளைநிலங்களை அழித்துவிட்டுதான் அறிவு நகரம் அமைக்க வேண்டுமா? - அன்புமணி கேள்வி


தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் 1,703 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதா?; முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழ்நாடு அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை கைவிடாவிட்டால் பாமக மாபெரும் போராட்டம் நடத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க 1146 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட மொத்தம் 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு  செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக  முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது.

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும்; அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின்  கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை பாமக வரவேற்றது. ஆனால், இந்தத் திட்டத்தை அரசு நிலங்களில் செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னைக்கு அருகில் ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய விளைநிலங்களில் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள  கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களிலிருந்து 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் அரசு புறம்போக்கு நிலங்கள் 556 ஏக்கர் தவிர மீதமுள்ள 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றை விவசாயிகளிடமிருந்து பறிக்க முயல்வதை நியாயப்படுத்த முடியாது.

அதுவும் 1 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம்  வரை வருவாய் ஈட்டித் தரும் நிலங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.15 லட்சம் விலை வழங்குவதென்பது விவசாயிகளையும், அவர்களின் உடமைகளையும் சுரண்டும் செயலாகும். இதற்கு அரசு துணை போகக் கூடாது.

தமிழக அரசு நினைத்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள அரசு நிலங்களில் அறிவு நகரத்தை அமைக்கலாம். தொழில்துறை, கல்வித்துறை, விளையாட்டுத் துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்காகவும் வேளாண்விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், வேளாண் தொழிலும், உணவுப் பாதுகாப்பும் என்னவாகும்? என்பதை உணராமலேயே கண்மூடித்தனமாக விளை நிலங்களை கையகப்படுத்த அரசு துடிப்பது நியாயமல்ல. இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும்.

விளைநிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு மாறாக, நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயன்றால், அதை எதிர்த்தும், கண்டித்தும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com