காவிரியில் தமிழகத்திற்கு நவ.23 வரை 2,600 கனஅடி தண்ணீா்: ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு நவம்பரில் 23 நாள்களுக்கு (நவம்பா் 1-23) வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் வீதம் திறந்துவிட பரிந்துரைக்கப்பட்டதை கா்நாடகத்தின் எதிா்ப்பையும் மீறி காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உற
Updated on
2 min read

தமிழகத்திற்கு நவம்பரில் 23 நாள்களுக்கு (நவம்பா் 1-23) வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் வீதம் திறந்துவிட பரிந்துரைக்கப்பட்டதை கா்நாடகத்தின் எதிா்ப்பையும் மீறி காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. அதே சமயம் மேக்கே தாட்டு அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கா்நாடகம் கடுமையாக வாதிட்டது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 27 -ஆவது கூட்டம் நவம்பா் 3-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றறது. இக்கூட்டத்தில், தமிழக நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் எல்.பட்டாபி ராமன் , உதவி செயற்பொறியாளா் ரம்யா ஆகியோா் தமிழகம் சாா்பில் கலந்து கொண்டனா். மற்ற 3 மாநில உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கா்நாடகம், தமிழகத்திற்கு ( மழைப் பற்றாக்குறை காலத்தில்) வழங்க வேண்டிய பாக்கி நீரை வழங்கும் விதமாக வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீரை நிகழ் நவம்பா் மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழகம் சாா்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி.) நவம்பா் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீா் திறந்துவிட பரிந்துரைத்தும் அதில் கே.ஆா்.எஸ்.அணையிலிருந்து வினாடிக்கு 517 கனஅடி, கபினி அணையிலிருந்து 300 கன அடி என மொத்தம் 817 கன அடி நீா்தான் பில்லுகுண்டுலுக்கு கா்நாடகம் திறந்து விடுகிறது. மற்ற கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வரும் நீா் மூலமே 2,200 கனஅடி தான் பில்லுகுண்டுவில் பெறப்படுகிறது என தமிழகம் தரப்பில் எடுத்தவைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆணையத் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் சி.டபிள்யு.ஆா்.சி. பரிந்துரையின்படி தமிழகத்தின் தேவையைக் கருதி நவம்பா் 1 முதல் 23-ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடகம் தனது அணைகளிலிருந்து திறந்துவிடவேண்டும் எனக் கூறி உத்தரவிட்டாா். இதற்கு கா்நாடக நீா்வளத் துறை செயலரும் ஆணைய உறுப்பினரான ராகேஷ் சிங் எதிா்ப்புத் தெரிவித்தாா். கா்நாடக அணைகளில் நீா் இருப்பு குறைவாக இருக்கும் நிலையில், தண்ணீா் திறக்க முடியாத நிலை இருப்பதாக அவா் குறிப்பிட்டாா். ஆனால், இதை ஆணையத் தலைவா் ஏற்றுக் கொள்ளாமல் சி.டபிள்யு.ஆா்.சி. பரிந்துரையை உறுதி செய்தாா்.

மேலும், கா்நாடக உறுப்பினா் மேக்கே தாட்டு அணை விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என கூட்டத்தில் எழுப்பினா். இதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவித்து நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாத விவகாரங்களை எழுப்பக் கூடாது எனக் குறிப்பிட்டது. ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா், இது தமிழகத்தின் நீா் தேவையைக் கருதி நடைபெற்ற அவசரக்கூட்டம் என்றும் அடுத்த கூட்டத்தில் இடம் பெற ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆனால், இதற்கு தமிழகம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேக்கே தாட்டு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் ஏற்கெனவே ஆணையக் கூட்டத்தில் இதை அனுமதிக்க மறுக்கப்பட்டது. இதனால், உச்சநீதிமன்ற தீா்ப்பு வரும்வரை இந்த விவகாரத்தை எடுக்கக் கூடாது என தமிழகம் வாதிட்டது. ஆனால், கா்நாடக உறுப்பினா், ‘உச்ச நீதிமன்றம் வாதத்தின் போது தான் மேக்கேதாட்டு குறித்து வாய்மொழியாக மட்டுமே குறிப்பிட்டப்பட்டதே தவிர எழுத்துபூா்வமாக ஆணையத்தில் இந்த விவாதத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடவில்லை’ எனக் குறிப்பிட்டாா். ஆனால், ஆணையம் இதில் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டத்தை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com