சென்னையில் எங்கு மழைநீர் தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு

சென்னையில் எங்கு மழைநீர் தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என். நேரு

சென்னையில் கடந்த ஆண்டை விட கூடுதலாக மழை பெய்தாலும் எங்கு மழைநீர் தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். 
Published on


சென்னை: சென்னையில் கடந்த ஆண்டை விட கூடுதலாக மழை பெய்தாலும் எங்கு மழைநீர் தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து திரு.வி.க நகர் பகுதிக்கு  உள்பட்ட அங்காளம்மன் கோயில் தெரு, ஸ்டீபன்சன் சாலை, ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, கடந்த 2, 3 நாள்களாக 11 செ.மீட்டர் மழை பெய்தும் 1 மணி நேரத்தில் மழைநீர் தேங்கியுடன் அகற்றப்பட்டது. சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காத அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரிகளும் களப்பணி ஆற்றி வருவதாக கூறினார். 

சென்னை ஆலந்தூரில் 9 செ.மீட்டர் மழை அரை மணி நேரத்தில் பெய்தது,  மழை பெய்து தேங்கிய தண்ணீர் ஒரு மணி நேரத்தில் வடிந்தது. இதை விட கூடுதலாக 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் அதை அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து பேசியவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. சென்னையை சுற்றிய ஏரிகளை சுத்தப்படுத்தி மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள், மரம் விழுந்தால் அகற்றுவதற்கு பணியாளர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் மட்டும் 2000 பேர் உள்ளனர். மேலும், சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என கே. என். நேரு தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com