
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை கூடிய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் உள்பட 50 உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மாநகராட்சி ஆணையர் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து வெளியேறினார்.
திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்ததோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 மாமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து புதன்கிழமை காலை திருநெல்வேலி மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் உள்ள கூட்டரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், 10 மணிக்கு வந்தார். மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கூட்டரங்கின் அருகே உள்ள அறையில் காத்திருந்தனர்.
இதையும் படிக்க | உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் 2,700-ஆக அதிகரிப்பு!
அரை மணி நேரத்திற்கு பின்பு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சீதா பாலன், பிரபாசங்கரி, அதிமுக மாமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் அனுராதா ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 48 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் ஆணையர் கூட்ட அரங்கில் இருந்து 40 நிமிடத்திற்கு பின்பு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயரும் காத்திருப்பு அறையில் இருந்து வெளியேறினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள், மேயர், அதிகாரிகள் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல் போக்கினால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.