திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை பலியானார்.
மேலவாசல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் குமார் (50) விவசாயத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
விவசாய தொழிலாளியான குமார், புதன்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு வந்தவர் அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் என்பவருடைய போர் செட்டில் குளித்துவிட்டு அங்கே துணியை காயப்போட கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் தனது ஆடைகளை காய வைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்.
இதையும் படிக்க | உங்களுடைய பான் கார்டு செயல்பாட்டில் உள்ளதா?
மறுநாள் வியாழக்கிழமை காலை வேலைக்கு செல்லும் போது அந்தத் துணிகளை எடுக்க முயன்றபோது மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு அந்த இரும்பு கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், துணியை எடுத்த குமார் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து மன்னார்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வு பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனா்.