நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு டேங்கர் லாரி, இரண்டு சரக்கு லாரிகள் என மூன்று லாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு லாரியில் முழுமையாக காட்டன் துணிகள் இருந்தன. மற்ற இரு லாரிகளில் பொருள்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென மூன்று லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம்!
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் காவல் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.