சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.சங்கரய்யா(வயது 102) சளித் தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் நவ.14-இல் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் என்.சங்கரய்யா உயிரிழந்தார். அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று காலை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சங்கரய்யாவின் உடல் வைக்கப்பட்ட பின், பிற்பகல் திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானம் வரை சங்கரய்யாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி அ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பெசன்ட் நகர் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்னும் சற்றுநேரத்தில் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.