கோவை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய திரையில் படம் பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கோவை பிராட்வே சினிமாஸில் படம் பார்த்த ஜிகர்தண்டா குழுவினர் தெரிவித்தனர்.
தீபாவளி நாளில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இதை முன்னிட்டு ஜிகர்தண்டா படக்குழுவினர் கோவையில் ஜிகர்தண்டா படம் திரையிடப்பட்ட திரையரங்குக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து நன்றி கூறினர்.
கோவை அவிநாசி சாலை பிராட்வே சினிமாஸில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா மற்றும் குழுவினர் எபிக் திரையில் ஜிகர்தண்டா படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்களுடன் படம் குறித்தும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் பேசினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய படக்குழுவினர், தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கமான பிராட்வே சினிமாஸில் எபிக் திரையில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் மிகவும் நேர்த்தியாக பிராட்வே திரையரங்கம் உள்ளதாகவும் அதற்காக ரசிகர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி எனத் தெரிவித்தனர்,
அப்போது திரையரங்கு உரிமையாளர் செயல் தலைவர் தேஜல் சதீஷ், மார்க்கெட்டிங் தலைவர் நேஹா சதீஷ் உள்பட பலர் இருந்தனர்.