திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாரதவிதமாக ரயில் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இருமகள்கள் என 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (48). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 12 மணி அளவில் அவர் தனது மகள்களான தர்ஷினி (18), தாரணி (17) ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதற்காக வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றாராம்.
அப்போது, அவர்கள் ரயில் தண்டவளத்தை கடந்த போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் எதிர்பாரத விதமாக மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே பலியாகினர். இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் இருவர் காயம்
மேலும் இந்த விபத்து குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இருமகள்கள் உயிரிழந்த சம்பவம் பெருமாள்பட்டுப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.