காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க | காஞ்சிபுரம்: பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவை கலந்த அவலம்!
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கவில்லை என்றும், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தொட்டியில் போட்டதால் துர்நாற்றம் வீசுவதாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளியின் குடிநீர்த் தொட்டியை ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை காலை இடித்து அகற்றியுள்ளனர்.