நவ.27 முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாத மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் நவ. 27ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது.
இது பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.