மக்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை: நாளை மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
மக்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை: நாளை மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைக் காண மக்கள் அலை கடலெனத் திரண்டு வருகின்றனர். 

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், மூலவா் ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதேநேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவா்.

தீபத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட, கோயில் நிா்வாகத்தினா், காவல் துறையினா் செய்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்துள்ளனா். இந்தக் கொப்பரை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3,500 கிலோ முதல்தர நெய், தீபம் எரிவதற்காக திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி ஆகியவை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீசம்பந்த விநாயகா் சன்னதியில் காடா துணிக்கு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இவை அனைத்தும் சனிக்கிழமை (நவ. 25) காலை 2,668 அடி உயர மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு வைக்கப்படும் மகா தீபக் கொப்பரைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com