
கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
இதனைக் காண பல்வேறு நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகைபுரிவது வழக்கம்.
கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்த நிலையில், இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை வருபவர்கள் எளிதாக கோயிலை அடைய 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 சிற்றுந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் 600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்களின் நலன் கருதி 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப் பாதை முழுக்க 20 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்காளுக்காக கிரிவலப் பாதையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குப்பைகளை அகற்றி தூய்மையைப் பேணும் வகையில், கிரிவலப் பாதை உள்பட கோயிலைச் சுற்றிலும் 4 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.