புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகின்றது. நேற்று ஒரேநாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று திருச்சி மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 18 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 284 ஆக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 83 பேர் 12 வயதுக்குள்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.