தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியது,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு குறைவாகவே பதிவாகியுள்ளது.
வடஇலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது.
123 ஆண்டுகளில் 9வது முறையாக இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 8 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 29-ம் தேதி(இன்று) வரை 349.6 மி.மீ மழைப் பதிவாக வேண்டிய நிலையில் 320.5 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பிலிருந்து 8 சதவீத குறைவாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், திருவள்ளூர், புதுச்சேரி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
மேலும் இன்று (நவ.29) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.