அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பெற்று வரும் பெண் காவலர் ஓருவரின் சான்றிதழ்கள் போலி என தெரியவந்ததை அடுத்து அப்பெண் காவலர் மீது தக்கோலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்திற்கு அருகில் உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையம் உள்ளது. இந்த படையில் சேரும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சியில் மேற்கு வங்காள மாநிலம், சுக்தேவ்பூர் வட்டம், ஜோத்சிபரம்பூர் வட்டாரம், பாரா கிராமத்தைச் சேர்ந்த திணேஷ்சிங்கின் மகள் சோனம்சிங்(23) காவலர் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். இவரது சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிய அனுப்பப்பட்டது. இதில் அந்த சான்றிதழ்கள் போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சோனம்சிங் மீது பயிற்சி மையத்தின் ஆய்வாளர் சிவபத்மா தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.