மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக, சுதந்திரமான விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகள்.
எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை பாஜக மறந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் புறக்கணிக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக தெளிவாக பயப்படுகிறது. அவர்கள் தங்கள் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | புதுச்சேரி: ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் சோதனை
முன்னதாக, தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக, அவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகாரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.