சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சளித் தொடர்பான பிரச்னைகளுடன் நாள்தோறும் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு சில வாரங்களாகவே இந்த நிலை நீடிக்கும் நிலையில், நாள்தோறும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால், மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக, மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. பரபரப்பான சாலையில் திருடுப்போன பேருந்து நிழற்குடை!
குறிப்பாக, மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ளன. ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டால், குழந்தையுடன் பெற்றோர் உள்பட சராசரியாக 4 பேர் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருக்கிறார்கள். மருத்துவமனைக்குள் பெற்றோர் இருக்கும்பட்சத்தில் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருப்பதால், கூட்டம் கடுமையாகக் காணப்படுகிறது.
இதனால், மருத்துவமனை வளாகமே, நோய்த் தொற்றுக்கான அபாயப் பகுதியாக மாறிவிடுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து குழந்தைகளுடன் இந்த மருத்துவமனைக்கு வருவோர், வேறு எங்கும் தங்கியிருக்க முடியாமல், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கும் நிலையும் உள்ளது.
இதையும் படிக்க.. இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
கழிப்பறை உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வது அண்மைக் காலமாக சவாலாக உள்ளதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குப்பைத் தொட்டிகள் வைத்து தூய்மையாக பராமரித்தாலும், குழந்தையுடன் வருவோர், சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே குப்பைகளை எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகமே குப்பைமேடாக காணப்படுகிறது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.