கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த திடீர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 7,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் மழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு திடீரென அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.