கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழுத் தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் நாளை (அக். 13) தாக்கல் செய்யவுள்ளனர்.
வழக்கில் கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து முழுத் தகவல்களுடன் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் கேட்க முடிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூா் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடைபெற்ற கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருள்கள் எவை என்பது பற்றி சசிகலா மற்றும் இளவரசிக்குத்தான் தெரியும். இந்த வழக்கில் புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணை நடத்தவில்லை, முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டனா் என்றும், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.