சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைத்தார்.

News image
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Updated On :14 அக்டோபர் 2023, 5:51 am

DIN


நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைத்தார்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் கடந்த 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் "செரியபானி" பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். 

Story image

நாகை துறைமுகத்தில் "செரியபானி" பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய துறைமுகங்கள்  துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி உள்ளிட்டோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, தமிழக சட்டத்துறை அமைச்சா் ரகுபதி உள்ளிட்டோா் இலங்கைக்கான முதல் பயணத்தை  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசிய வாழ்த்து செய்தி விடியோ ஓளிபரப்பப்பட்டது.

Story image

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட "செரியபானி" பயணிகள் கப்பல்.

அதில் பேசிய பிரதமர் மோடி, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தொடங்கியுள்ள கப்பல் போக்குவரத்து சேவை என்பது இந்திய-இலங்கை உறவுகளில் இது ஒரு புதிய அத்தியாயம் என்றும் இதன் மூலம்  இருநாட்டு கலாசாரம், தொழில் வர்த்தகம் மேம்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்,  காணொலி காட்சி வாயிலாக இலங்கையில் இருந்து பிரதமர் ரனில் விக்ரமசிங்க, அந்நாட்டு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா ஆகியோர் பேசினர். 

Story image

கப்பலில் ஏறி புறப்பட்டுச் சென்ற பயணிகளுக்கு நாகை துறைமுகத்தில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் கைகளை அசைத்தும், செல்போனில் புகைப்படம் எடுத்து  மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

கப்பலில் முன்பதிவு செய்த 50 பயணிகளின் உடமைகள் மற்றும் கடவுச்சீட்டுகளை சோதனை செய்த இமிகிரேஷன் அதிகாரிகள் அவர்களை கப்பலுக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பயணிகள் மகிழ்ச்சியுடன் கடல் வழி பயணத்தை தொடங்கினர். கப்பலில் ஏறி புறப்பட்டுச் சென்ற பயணிகளுக்கு நாகை துறைமுகத்தில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் கைகளை அசைத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

40 ஆண்டுகளுக்கு பின் நாகையில் இருந்து இலங்கைக்கு தொடங்கிய கப்பல் சேவைக்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த கடல்வழி பயணம் மீண்டும் தொடங்கியுள்ளது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Story image

நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் "செரியபானி" பயணிகள் கப்பல்

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகையில் இருந்து சுமாா் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6.500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து ஒரு நபருக்கு ரூ. 7.670 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்துக்குள் வரும் நபா்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். ஏற்கெனவே இரண்டு முறை கப்பல் போக்குவரத்து சேவைக்கான தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், மிகுந்த எதிா்பாா்ப்புக்கு இடையே சனிக்கிழமை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.