நாமக்கல்: வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவை தேர்தலையொட்டி தென் மாவட்டங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது வட சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. கட்சி தொடங்கியது முதலே தெரிவித்து வருகிறேன்.
நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும். இந்தியா கூட்டணி, பாஜக இது பெரும் கட்சிகள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி மக்களிடையே தனித்து களம் காணும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதால் அதனை முடக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்து வருகிறது
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி தேவையற்ற ஒன்றாகும். தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்றார்.