சென்னை நாவலூர் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் நாளை(அக். 19) முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை(அக். 19) முதல் நாவலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'இருசக்கர வாகன விற்பனை அடுத்த 9 ஆண்டுகளில் இரு மடங்காகும்'
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திமுக அரசு பதவி ஏற்றவுடன், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்று, நாளை(அக். 19) முதல் நாவலூர் கட்டணச் சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றார்.