நீடாமங்கலம்: சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் மும்முனைப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேலுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் நீலன்.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் அ.சுரேன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன், தன்னம்பிக்கை வட்ட மாவட்ட தலைவர் ஜி.குமாரசாமி, மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜாராமன், விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் பிரேமா, சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு வீரர் பிரவீன் சித்திரவேலுக்கு பள்ளியின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் சந்தானலெட்சுமி வரவேற்றார். தமிழாசிரியர் குணசீலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் அம்பிகா நன்றி கூறினார்.