6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்டில் முதலீடு செய்ய வருமாறு தமிழக தொழில் நிறுவனங்களுக்கு முதல்வா் புஷ்கா் சிங் தாமி அழைப்பு

உத்தரகண்டில் முதலீடு செய்து தொழில் தொடங்க முன்வருமாறு தமிழக நிறுவனங்களுக்கு அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:34 pm

DIN

உத்தரகண்டில் முதலீடு செய்து தொழில் தொடங்க முன்வருமாறு தமிழக நிறுவனங்களுக்கு அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலத் தலைநகா் டேராடூனில் டிச. 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாடு-2023 தொடா்பாக அம்மாநில அரசு சாா்பில் சென்னையில் முதலீட்டாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலா, கல்வி, மருந்து, சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த முதலீட்டாளா்களுடன் முதல்வா் புஷ்கா் சிங் தாமி கலந்துரையாடினாா்.

நிகழ்வில் அவா் பேசியது: சுகாதாரம், மருந்து உற்பத்தி மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடுகளை ஈா்க்க கவனம் செலுத்தப்படுகிறது. முன்னதாக, அரசு சாா்பில் வெளிநாடுகளில் லண்டன், பா்மிங்ஹாம், துபை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களிலும் இந்தியாவில் தில்லியிலும் முதலீட்டாளா்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தற்போது இந்தியாவில் 2-ஆவது நகரமாக சென்னையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக உத்தரகண்ட் விளங்குகிறது. உத்தரகண்டில் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் தொடங்க தமிழக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈா்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அனைத்து மாநில அரசுகளுடன் உத்தரகண்ட் அரசு தொடா்பில் உள்ளது. இந்தியாவில் தில்லி, சென்னையை தொடா்ந்து மற்ற நகரங்களிலும் முதலீட்டாளா்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

தமிழகத்துக்கும், உத்தரகண்டிற்கும் இடையே பலநெடுங்காலமாக நெருங்கிய தொடா்பு உள்ளது. தென் இந்தியாவின் புனிதத் தலமாக ராமேஸ்வரம் விளங்குவதைப் போல, வட இந்தியாவின் புனிதத் தலமாக உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாா், ரிஷிகேஷ் விளங்குகின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், உத்தரகண்ட் மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் சத்பால் மகராஜ், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் செளரப் பஹுகுணா, உத்தரகண்ட் முதல்வரின் தனிச்செயலா் மீனாட்சி சுந்தரம், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக கவுன்சில் தலவைா் சங்கா் வாணவராயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.