அரக்கோணம் நகராட்சி நாளங்காடி வளாகத்திலிருந்த காந்தி உருவச்சிலை புதன்கிழமை பட்டப்பகலில் திருடப்பட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடிக்கு புதிய கட்டடம் கட்டும் பணிக்காக பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் பலர் இதுவரை கடைகளை காலி செய்து தராததால் அப்பணி தொய்வுற்று நடைபெறுகிறது.
இந்த நகராட்சி வளாகத்தின் நுழைவு பகுதியில் மாடியில் மகாத்மா காந்தியின் மார்ப்பளவு உருவச்சிலை இருந்தது. கடந்த 1949ல் இந்த கட்டடம் கட்டப்பட்ட போது வைக்கப்பட்ட இந்த சிலை 1984ல் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்ட போதும் நுழைவுவாயில் பகுதி மாற்றப்படாமல் அப்பகுதி சீரமைப்பு மட்டும் செய்யப்பட்டது.
தற்போது அந்த கட்டடம் இடிக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் புதன்கிழமை அங்கு ஆட்டோவில் வந்த 4 பேர் காந்தி சிலையைப் பெயர்த்து எடுத்துச் சென்று விட்டனர்.
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது அலுவலகத்தில் இருந்து யாரும் வந்து காந்தி உருவச்சிலையை அகற்றவில்லை எனத் தெரிவித்தனர்
இதைத் தொடர்ந்து காந்தி உருவச்சிலை களவு போயிருப்பது தெரியவந்துள்ளது. அரக்கோணம் நகராட்சி அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலை களவு போகும் சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் அரக்கோணம் நகரில் மகாத்மா காந்தி சிலை களவு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.