திருவொற்றியூரில் ரூ.58.64 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இதுதொர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருவொற்றியூர் மணலி இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய் மீது போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 58.64 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆனால் 18 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணி பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் தாமதமாகியது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்சென்று மிகவும் சிரமப்பட்டனர். இதை அடுத்து இப்பணியை முடிக்க வலியுறுத்தி மணலி சேக்காடு வியாபாரிகள் சங்கம், கம்யூனிஸ்ட் மற்றும் பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து முதல்வரின் ஆணைக்கிணங்க மேம்பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், உயர்மட்ட கால்வாய் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இப்புதிய பாலத்தால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். திருவொற்றியூரிலிருந்து மணலி, மாதவரம், மீஞ்சூர் மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். மணலியிலிருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, இராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாக செல்ல முடியும்.